ஓர் தனிமனிதனின் கெட்டித்தனங்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும் என்பதற்காக இக்கதை கூறப்படவில்லை. இவ்வுலகில் மனிதர்களாகப் பிறந்த அனைவரும் கெட்டிக்காரர்களே! ஆனால் துரதிட்டமாக மனிதர்களுக்கு தாம் யார், தமது ஆற்றல்கள் எவை என்று தெரிந்து இருப்பதில்லை. இதனாலேயே பெரியவர்கள் “உன்னையே நீ அறிவாய்!” என்று கூறுவார்கள்.
“தம்மையே தாம் அறிதல்” என்பது வியாபார மயப்படுத்தப்பட்டுள்ள இக்காலத்தில், நமது அறிவு கூர்மையடைந்து வித்தியாசமான கோணத்தில் நாம் உலகை தரிசிக்க முயற்சிக்கும்போது, சில வித்தியாசமான அனுபவங்கள், உணர்வுகள் பெறப்படும்போது எமக்கு பலவிதமான நெருக்கடிகள், உயிர் ஆபத்துக்கள் தோன்றலாம்.
ஓர் படகில் அந்தப்படகின் பலத்திற்கும், அளவிற்கும் ஏற்புடைய பாரங்களையே ஏற்றமுடியும். படகு சுமக்க முடியாத பாரங்களை ஏற்றினால் படகு தண்ணீரில் அமிழ்ந்துவிடும். இதேபோல் படகில் அளவுக்கு மிஞ்சிய பாரங்களை ஏற்றும்போது படகு நகர்கின்ற வேகம் குறையும் என்பதோடு, அது கவிழ்வதற்குரிய சாத்தியங்களும் அதிகரிக்கின்றன. இதனால், நீண்டதூர பயணத்தை கடக்கவேண்டிய படகில் அது சுமக்கக்கூடிய அளவு பாரங்களை மட்டும் நாம் ஏற்றுவதே உசிதமானது.
மனித வாழ்க்கையும் இவ்வாறானதே. உலகில் பல விடயங்கள் இருக்கின்றன. எமக்கு தெரியாத பல சங்கதிகள் இருக்கின்றன. நாம் எல்லாவற்றையும் பற்றி அறிந்து இருக்கவேண்டும், உணர்ந்து இருக்கவேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. மனிதர்களோடு மனிதர்களாக ஒன்றுசேர்ந்து ஒருவரில் ஒருவர் அன்பு செலுத்தி வாழ்வதே மிகப்பெரிய விடயம். மானுடத்தின் வெற்றி இங்குதான் – நாம் ஒவ்வொரு மனிதர்களும் மனிதத் தன்மையுடன் மனிதர்களாக வாழ்வதில்தான் தங்கி இருக்கின்றது.
இங்கு கதையில் வருகின்ற சம்பவங்கள் அனைத்தும் உண்மைச் சம்பவங்களே. எனினும் கதை சொல்லப்படும் பாங்கு வேறுபட்டது. உண்மைச் சம்பவங்கள் உற்று நோக்கப்படும் கோணம் வேறுபட்டது.
பொழுதுபோக்கு, சுவாரசியமான தகவல்களை அறிதல், பொதுவாக வழமையில் கூறப்படுகின்ற நல்ல அறிவுரைகளை பின்பற்றுதல் என்பதற்கு அப்பால் கதையில் விபரிக்கப்படுகின்ற மிகவும் ஆபத்தான நுட்பங்கள், சிக்கலான அணுகுமுறைகள், பல்வேறு தரவுகளை உங்கள் நடைமுறை வாழ்வில் பரீட்சித்து பார்க்க வேண்டாம் என நீங்கள் அன்புடன் அறிவுறுத்தப் படுகின்றீர்கள்.
J Zero L Org